சிறுநீரகநோய் என்றால் என்ன ?

 சிறுநீரகநோய் மற்றும் இரத்தச்சுத்திகரிப்புமுறை/டயலைஸிஸ் எனப்படும் இரத்தச்சுத்திகரிப்புமுறை பற்றி தெரியுமா?



சிறு நீரகம் என்பது எமது உடலின் முக்கிய சில செயற்பாடுகளை ஆற்றுகின்ற ஒரு உறுப்பாகும்.எமது உடலின் கழிவுகளை அகற்றுதல்,உடலின் இரத்த அழுத்தத்தை பேணுதல்,உடலின் சோடியம்,பொட்டாசியத்தின் அளவைப்பேணுதல்,அமோனியா போன்ற நச்சுக்கழிவுகளை அகற்றுதல் போன்றபல முக்கியமான தொழிற்பாடுகளை புரிகின்றது..ஒரு நபரில் சிறு நீரகத்தின் இந்த சாதாரண செயற்பாடுகள் நீண்டகால அளவில் சிறுது சிறிதாக குறைவடைந்து செல்லுமாயின் அவ் நோய் நிலையை நீண்டகால சிறு நீரகக்கோளாறு என்று அழைப்பார்கள்.அதாவது Chronic kidney disease (CKD). சிறு நீரகம் பல லட்சக்கணக்கான சிறு நீரகத்திகளைக்கொண்டு கட்டமைக்கப்பட்ட ஒரு அமைப்பாகும். சிறு நீரக நோய் சிறு நீரகத்தியின் வடிகட்டுவீதத்தின் அடிப்படையில் 5 வகையாகப்பிரிப்பார்கள்.இதன் இறுதி நிலை அதாவது நிலை 5 , சிறு நீரகத்தின் முற்றுமுழுதான செயலிழப்பு
(endstage kidney failure) என்று அழைப்பார்கள்.இந்த நிலைக்கு சென்ற நோயாளிகளுக்கே இரத்த சுத்திகரிப்பு செய்யவேண்டிய நிலை ஏற்படும்.
சிறு நீரகக்கோளாறின் ஆரம்ப கட்டங்களில் நோய்க்கான அறிகுறிகளை இனங்காண்பது கடினம், ஆனால் இறுதி நிலையில் பின்வரும் அறிகுறிகள் தென்படும்.

·         உடல் நிறையில் குறைவு ஏற்படும்
·         உணவில் விருப்பமின்மை
·         கை,கால்களில் வீக்கம்
·         களைப்பு/இளைப்பு,மூச்சுத்திணறல்
·         சிறு நீரில் இரத்தம்
·         நித்திரைக்குழப்பம்.

இதற்கான சிகிச்சை முறைகள்




1)வாழ்க்கைமுறையில் மாற்றத்தை ஏற்படுத்தல்(தினசரி உடற்பயிற்சி செய்தல்,மது மற்றும் புகைத்தலைக்கட்டுப்படுத்தல்,நிறையுணவை உண்ணுதல்,நிறையை கட்டுக்குள் வைத்திருத்தல்)
2)மருந்துகள் மூலம் உயர்குருதியமுக்கம்,கொலஸ்ரோல் மற்றும் நீரிழிவு நோயைக்கட்டுப்பாட்டுக்குள் வைத்திருத்தல்.
3)இரத்தச்சுத்திகரிப்பு முறையைப்பயன்படுத்தல்.(dialysis)
4)சிறு நீரகமாற்று சத்திரசிகிச்சை(kidney transplantation)

இரத்தச்சுத்திகரிப்பு முறை (Hemodialysis)

இது செயற்கைமுறையில் இரத்தத்தை சுத்திகரிக்கும் ஒரு முறையாகும்.சிறு நீரகம் செயலிழப்பதன் காரணமாக சிறு நீரகச்செயற்பாடு பாதிப்படைந்த நோயாளர்களுக்கு இம்முறைமூலம் இரத்தம் சுத்திகரிக்கப்படுகின்றது. இச்செயற்பாட்டின்போது இரத்தத்தை ஒரு இயந்திரத்தினுள்( dialyser)செலுத்துவார்கள்.இவ் இயந்திரம் செயற்கைச்சிறு நீரகம் போன்று தொழிற்பட்டு இரத்தத்தில் இருக்கும் யூரியா நைட்ரஜன் போன்ற கழிவுகளை அகற்றுவதுடன் இரத்தத்தில் இருக்கும் சோடியம் பொற்றாசியம் சமநிலையையும் இது சரிசெய்யும். இந்த இயந்திரத்தை உடலினுள் இணைப்பதற்காக நாடியையும் நாளத்தையும் இணைத்து fistula/graft ஒன்றை உருவாக்குவார்கள் இதனூடகவே இயந்திரத்திற்கு இரத்தம் பரிமாற்றப்படும்.

இச்செயன்முறையின்போது நோயாளிக்கு எந்த வலியும் ஏற்படாது. சாதாரணமாக இச்செயன்முறை 3அல்லது 4 மணித்தியாலங்கள்வரை நீடிப்பதால் பொதுவாக நோயாளிகள் நித்திரைக்கு சென்றுவிடுவார்கள். ஆனால் சில நோயாளிகளுக்கு குருதியமுக்கம் குறையுமாயின் தசைப்பிடிப்பு,சத்தி,தலைவலி போன்ற பக்கவிளைவுகள் ஏற்படும்.இவ் இரத்தச்சுத்திகரிப்பு செயன்முறைக்கு எடுக்கும் நேர அவகாசம் நோயாளியின் சிறுநீரகத்தின் தொழிற்பாட்டின் அளவு, நிறை என்பவற்றிற்கேற்ப வேறுபடும்.



இரத்தச்சுத்திகரிப்புக்கு அடுத்தபடியாக சிறுநீரக நோயாளர்களுக்கு மேற்கொள்ளப்படும் சுத்திகரிப்புச்செயன்முறையை Peritoneal dialysis என்று அழைப்பார்கள். இச்செயன்முறையின்போது ஒரு இறப்பர் குழாய் வயிற்றுப்பகுதிக்குள்(peritoneal cavity)அனுப்பப்பட்டு சுத்திகரிப்பு மேற்கொள்ளப்பட்டும்.
இது இரத்தச்சுத்திகரிப்புச்செயன்முறையைவிட இலகுவானது,செலவு குறைந்தது.



இச் சுத்திகரிப்புச்செயன்முறைகளானது சிறு நீரக செயலிழத்தலுக்கான தற்காலிகத்தீர்வையே தரும். இறுதி நிலை சிறு நீரகக்கோளாறைக்கொண்டிருக்கும் நோயாளி வாழ் நாள் முழுவதும் இச்சுத்திகரிப்பு செயன்முறையில் தங்கியிருக்கவேண்டிய நிலை ஏற்படும்.ஆனால் அவ் நோயாளி சிறு நீரக மாற்று சத்திரசிகிச்சையை மேற்கொள்ளுமிடத்து சுத்திகரிப்பிற்கான தேவையை தவிர்த்துக்கொள்ளமுடியும்.

சிறு நீரகச்செயலிழத்தல் நோய்க்கு உள்ளான நோயாளிகள் தமது உணவு தொடர்பில் முக்கியகவனம் எடுக்கவேண்டும்.சோடியம்,பொட்டாசியம் அதிகம் உள்ள உணவுகளை குறைக்கவேண்டும் முக்கியமாக பழங்கள்(அப்பிள்,ஒரேஞ்,வாழைப்பழம்..).உணவில் உப்புச்சேர்த்தலை முடிந்த அளவிற்கு குறைக்கவேண்டும்.பால் உணவுப்பொருட்கள்(சீஸ்,யோகட்...) உண்பதை குறைக்கவேண்டும்.

இலங்கையை பொறுத்தவரையில் Chronic kidney disease of unknown aetiology (CKDu) என்ற சிறு நீரக நோய் காணப்படுகின்றது.வழமையாக நீண்டகால சிறு நீரக செயலிழத்தலுக்கு(CKD) உயர்குருதியமுக்கம் மற்றும் நீரிழிவு நோய் என்பன முக்கிய காரணிகளாக இருந்தாலும் (CKDu) இவ் வகை சிறு நீரக செயலிழத்தலுக்கு சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இன் நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் அனுராதபுரம்,பொலனறுவை மற்றும் பதுளை மாவட்டத்தைச்சேர்ந்தவர்கள்.

பொதுவாக இரத்தச்சுத்திகரிப்பு சிகிச்சைபெறும் நோயாளிகளின் ஆயுட்காலம் 5-10 வருடங்கள்வரை நீடிக்கப்படுகின்றது.இருப்பினும் சிலர் 15 வருடங்கள் வரை தொடர்ச்சியான இரத்தச்சுத்திகரிப்புமுறை மூலம் உயிர்வாழ்கின்றனர்.பொருத்தமான உணவுப்பழக்கம்,உடற்பயிற்சி மற்றும் இன் நோய் நிலைக்கு பங்களிப்புச்செய்யும் உயர்குருதியமுக்கம்,நீரிழிவு நோய் போன்றவற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருதல்,நடத்தையியலில் மாற்றத்தைக்கொண்டுவருதல் ஆகியவற்றின் ஒருமித்த பங்களிப்பின் மூலம் நோயாளி தன் வாழ்க்கைக்காலத்தை அதிகரித்துக்கொள்ளமுடியும்.





கருத்துரையிடுக

0 கருத்துகள்