இலங்கையில் ராமாயணத்தை நிரூபிக்கும்வகையில் ராமாயணத்துடன் தொடர்புடைய பெயர்களைக்கொண்ட ஊர்கள் ,குன்றுகள் என பல இடங்கள் இருக்கின்றன.அதிலும் முக்கியமாக இராவணனுடன் தொடர்புடைய 20க்கு மேற்பட்ட இடங்கள் இலங்கையில் காணப்படுகின்றன.அப்படியான ராமாயணத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் இடம்தான் சீதா எலிய(seetha eliya) ,இந்த ஊரில் சீதா அம்மன் கோவில் நுவரெலியா நகரத்தில் இருந்து 1 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்திருக்கின்றது.இராவணன்(ravana) சீதையை சிறைவைத்த இடம் இது என நம்பப்படுகின்றது.அதோடு சீதையை மீட்க வந்த அனுமான் இங்கேதான் சீதையை சந்தித்தார் என்பது இந்துக்களால் நம்பப்படும் வரலாறு.

இங்கே 3 அடி நீளமுடைய மிகப்பெரிய கால்தடம் ஒன்றை உங்களால் அவதானிக்கமுடியும் அங்கே ஓடிக்கொண்டிருக்கும் நதியில் இருக்கும் பாறையொன்றில்தான் இந்த கால்தடம் காணப்படுகின்றது.சீதையைக்காண்பதற்கு இலங்கைக்கு பறந்துவந்த அனுமான் சீதையை இங்கே இருப்பதைக்கண்டு வானில் இருந்து இந்த பாறைமீது குதித்தார் அப்போது அவரின் கால்தடம் இங்கே பதிந்துபோனதாம் அந்த தடம்தான் இது என பக்தர்கள் நம்புகின்றார்கள்.
உள்ளே பெரிய அனுமர் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது அதோடு சர்வசாதாரணமாக இக்கோவில் முழுவதிலும் குரங்குகள் உலாவருகின்றன.நுவரேலியாவுக்கே உரிய குளில் இங்கே குவிந்துகிடக்கின்றது.ஓடிக்கொண்டிருக்கும் ஆறு ஐஸ்கட்டியைப்போல் ஜில் என்றிருக்கின்றது.காலைவேளையில் இங்கே போகக்கிடைத்தால் மிக ரம்மியமான அனுபவமாக இருக்கும்.இந்தக்கோவிலுக்கு வட இந்தியாவில் இருந்தும் நன்கொடைகள் வழங்கப்பட்டிருக்கின்றன.திரு நீறு சந்தணத்துடன் செந்தூரமும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகின்றது அதோடு கோவிலினுள்ளே இருக்கும் சுவரில் ராமாயணவரலாறு செதுக்கப்பட்டிருக்கின்றது.
இந்தக்கோவில் நுவரெலியா கண்டிபிரதான வீதியின் அருகிலேயே அமைந்திருக்கின்றது,நுவரெலியா நகரத்தில் இருந்து 1 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்திருப்பதால் பஸ் மூலம் பிரயாணம் செய்வதானால் வெறும் 25 ரூபாயுடன் இவ்விடத்தை அடையமுடியும். நீங்கள் ஆட்டோவில் பிரயாணம் செய்வதாயின் 150 ரூபாயில் இருந்து 250 ரூபா வரை கொடுக்கவேண்டியேற்படும்.
இங்கே பூஜை செய்வதற்கு 100 ரூபா அறவிடப்படுகின்றது.கோவிலுடன் கழிப்பறைவசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
பூஜை நேரங்கள்- காலை 8.00-1.00,மாலை 2.00-6.30
தொலைபேசி எண்- 052-2235536, 052-2222038
அம்மன் கோவிலில் இருந்து இதேவீதியால் சென்றால் அடுத்த 5 கிலோ மீட்டர் தூரத்தில் ஹக்கல பூங்காவிற்கும் செல்லமுடியும் எனவே உங்கள் தங்குமிடம் நுவரெலிய நகரமாக இருந்தால் அதிகாலையில் 6/6.30 இற்கு உங்கள் பிரயாணத்தை ஆரம்பித்து இந்தக்கோவிலை தரிசிப்பதுடன் தரிசனம் முடிந்ததும் ஹக்கல பூங்காவிற்கு செல்லமுடியும்.
சீதை அம்மன் கோவில் அனுபவம் தொடர்பான காணொளி





0 கருத்துகள்