அங்கர் இல்லையா? இனிமேல் கவலையில்லை

Anchor milk


எமது அன்றாட உணவில் பால் மற்றும் பாற்பொருட்களின் பங்களிப்பு மிகவும் இன்றியமையாதது. பாலில் அதிகளவு புரதம், கொழுப்பு, சிறிதளவு மாப்பொருள் விற்றமின்கள் மற்றும் கனியுப்புக்கள் குறிப்பாக கல்சியம் மக்னீசியம் போன்றன அதிகளவில் காணப்படுகின்றன. எனவே இது உடலின் கட்டமைப்புக்கும் எலும்புகள் தசைகளின் வளர்ச்சிக்கும் மிகவும் அத்தியாவசியமானது. குறிப்பாக வளர்ந்து வரும் பிள்ளைகளுக்கும் மாதவிடாய் நிறுத்தக் காலப்பகுதியில் உள்ள பெண்களுக்கும் மிகவும் இன்றியமையாதது. ஆனாலும் தற்போது பசும்பாலை பாவிப்பதை விட இலகுவான வழியாக பால்மாவை வாங்கி பாவிப்பதையே அனேகமானவர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால் தற்போது அதற்கு இடையூறாக இலங்கை அரசாங்கம் பால்மா இறக்குமதியை நிறுத்தியதும் வேறு வழியின்றி பசும்பாலை தேடி வாங்குவதைக் காணக் கூடியதாக உள்ளது.

இதனால்அதிகரித்த தேவைப்பாடு காரணமாக பசுப்பாலுக்கான கேள்வி அதிகரித்துள்ளது. எனவே கலப்படங்களும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அத்துடன் புல் மேய்ந்து இயற்கையாக பாலைக் கொடுக்கக் கூடிய பசுக்களுக்கு பாலை அதிகரிக்க ஊக்கச்சத்துக்கள் மாஸ் போன்றவை அதிகளவில் வழங்கப்படுகின்றன. இதனால் பசுப்பாலின் நன்மைகளை விட அதிகமான தீமைகளே ஏற்படுகின்றன. ஆனாலும் எல்லோராலும் மாடு வளர்த்து பசும்பாலை பெற்றுக் கொள்வது இலகுவானதல்ல. காரணம் அதற்கான இடவசதி இன்மை, நேரம் பற்றாக்குறை மற்றும் பசுக்களுக்கான தீவனத்தை சரியாக பெற்றுக் கொள்ள முடியாமை எனப் பலவற்றை கூறலாம். அத்துடன் சிலர் பசுப்பாலும் கன்றுக்கானது என்பதால் அதைக் குடிப்பது அசைவம் உண்பது போல என்று ஒரு கொள்கையையும் வைத்துக் கொண்டுள்ளனர். 

 இதற்கான ஒரு தீர்வை இனி பார்ப்போம். மாடு தனது கன்றின் வளர்ச்சிக்கென சத்தான பாலை உற்பத்தி செய்வதைப் போல தாவரங்களும் தமது இனப்பெருக்கம் மற்றும் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வித்து முளைக்கும் போது உற்பத்தி செய்கின்றன. இந்த நிலையில் தாவர விதைகளில் இருந்து ஆரோக்கியமான தாவரப் பாலை நாங்கள் பெற்றுக் கொள்ள முடியும். உதாரணமாக தேங்காயில் இருந்து தேங்காய்ப்பால், சோயா விதைகளில் இருந்து சோயாப்பால், பருத்தி விதைகளில் இருந்து பருத்திப் பால், நிலக்கடலையில் இருந்து நிலக்கடலைப் பால், சோளத்தில் இருந்து சோளப்பால், சிறுதானியங்களில் இருந்து சிறுதானியப்பால், கோதுமையில் இருந்து கோதுமைப்பால் என்று பல வகையான தாவரப் பால்களைப் பெற்றுக்கொள்ள முடியும். இவற்றை சைவப்பால் என்றும் கூறலாம். இந்த விதைகளை ஊறவைத்து அரைத்துப் பிழிந்து தாவரப் பாலைப் பெற்றுக் கொள்ள முடியும். உதாரணமாக நிலக்கடலை பாலை எடுத்துக் கொண்டால் அதில் நிறையவே சத்துக்கள் நிறைந்துள்ளன. 

அதிகளவு புரதம் அதிகளவு கல்சியம் மக்னீசியம் விற்றமின் B6, விற்றமின் E, ஆகியன காணப்படுகின்றன. அத்துடன் இது வயதாதலை தடுத்து சருமத்தை இளமையாக வைத்திருக்க உதவும். இதிலுள்ள அன்ரி ஒக்சிடன்ற் தன்மை காரணமாக புற்றுநோய்க்கலங்களின் பெருக்கத்தை குறைக்க உதவும். இதில் கலோரிகள் அதிகம் இருந்தாலும் இதில் காணப்படும் புரதம் மற்றும் நார்ச்சத்து காரணமாக விரைவாகவே வயிறு நிரம்பிய உணர்வைக் கொடுக்கும். அத்துடன் இதிலுள்ள healthy unsaturated fat காரணமாக HDL எனப்படும் நல்ல கொழுப்பை அதிகரிக்க உதவுகிறது. எனவே உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தமது உணவில் நிலக்கடலை அல்லது நிலக்கடலை பாலை தமது உணவில் சேர்த்துக் கொள்வது அவசியமாகிறது. இந்தப்பாலை செய்யும் முறையை விரிவாக தெரிந்து கொள்ள இந்த வீடியோவை கிளிக் செய்யுங்கள் 

 மேலும் இந்தப் பாலில் இருந்து தயிரையும் தயாரித்துக் கொள்ள முடியும்

 100கிராம் கச்சானில் இருந்து ஒரு லிட்டர் பாலைப் பெற்றுக் கொள்ளலாம். இதனால் கிட்டத்தட்ட 75 ரூபாய்களிலேயே ஒரு லிட்டர் பாலைப் பெறலாம். பாலைக் காய்ச்சும் போது பசும்பால் போல நன்றாக காய்ச்சுவதை தவிர்த்து கொள்ளவும். மேலும் நேரடியாக சூடாக்காமல் டபிள் பொய்லர் மெதேட் எனப்படும் சூடான வெந்நீர் பாத்திரத்தில் வைத்து சூடாக்குவது சிறந்தது. ஆகவே நன்மைகள் பல கொண்ட தாவரப் பாலை தயாரித்து பயனடைவதுடன் இந்த கொரோனா காலத்தில் இதை ஒரு சிறு தொழிலாகவும் செய்ய முடியும். நன்றி

கருத்துரையிடுக

0 கருத்துகள்